General07 May 2026

11 வருடங்களுக்கு பின்னர் நாடாளுமன்றத்தில் நாளை இடம்பெறவுள்ள விசேட நிகழ்வு

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் (To Lam) நாளையதினம் (08) இலங்கை நாடாளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதுடன், நாடாளுமன்றத்தில் விசேட உரைநிகழ்த்தவுள்ளார்.

வியட்நாம் ஜனாதிபதி நாளையதினம் மு.ப 11.05 மணிக்கு நாடாளுமன்றத்திற்கு வருகை தரவிருப்பதுடன், அவரை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன வரவேற்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வியட்னாம் ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் இடையில் சிறியதொரு சந்திப்புக்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கை – வியட்நாம் நாடாளுமன்ற சங்கத்தின் தலைவர் அமைச்சர் தம்மிக பட்டபெந்திகே மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இணைந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது வியட்நாம் ஜனாதிபதி நாடாளுமன்ற விருந்தினர்களுக்கான விசேட புத்தகத்திலும் தனது குறிப்பை இடவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சபா மண்டபத்திற்கு வருகை தரும் வியட்நாம் ஜனாதிபதி, சபாநாயகருக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் ஆசனத்தில் அமர்ந்திருப்பார்.

பின்னர் மு.ப 11.40 மணிக்கு அவர் நாடாளுமன்றத்தில் உரைநிகழ்த்தவுள்ளார். 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளிநாட்டு அரச தலைவர் ஒருவர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையவுள்ளது.

வியட்நாம் ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் உரைநிகழ்த்தவிருப்பதுடன், நாடாளுமன்றம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதும் வியட்நாம் ஜனாதிபதி நாடாளுமன்ற வளாகத்திலிருந்து புறப்படுவார்.
Related recommendation
Hiru TV News | Programmes