General04 June 2026

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

டீசல் விலை உயர்வடைந்ததைத் தொடர்ந்து, பேருந்து கட்டணங்களை 5 சதவீதம் வரை அதிகரிக்குமாறு தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடலொன்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சில் இன்று (04) இடம்பெற்றுள்ளது.

கடந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் டீசல் விலை 25 ரூபாவினால் உயர்வடைந்துள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த திடீர் எரிபொருள் விலை உயர்வு காரணமாக, தினசரி பேருந்து சேவைகளை முன்னெடுத்துச் செல்வதில் கடுமையான நிதி நெருக்கடிகளை
எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பேருந்து கட்டணத் திருத்தத்தை அனுமதிக்க வேண்டும் அல்லது தனியார் பேருந்து சேவைகளைப் பாதுகாப்பதற்காக எரிபொருள் மானியமொன்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேருந்து சங்கப் பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலின் போது கோரியுள்ளனர்.

இந்த விடயம் குறித்து விரிவாக ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தை எட்டும் நோக்கில், போக்குவரத்து அமைச்சருடன் அவசர சந்திப்பொன்று விரைவில் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes