General11 June 2026

ஹொரணை அரச வங்கி கொள்ளைச் சம்பவம் - பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி கிளையொன்றில் மூன்றரை கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தரை ஜூன் மாதம் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹொரணை தலைமை நீதவான் லக்மினி விதானகமகே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அத்துடன், சந்தேகநபரின் உந்துருளியை நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக ஒப்படைக்குமாறு பணித்த நீதவான், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி (CCTV) காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் விபரங்களை முன்வைத்தனர்.

இதன்போது, இந்த வங்கியின் உதவி முகாமையாளரே கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவருடன் குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, சந்தேகநபர் சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள், இந்தச் சம்பவத்துடன் தமது கட்சிக்காரருக்கு எவ்வித தொடர்பும் இல்லை என வாதிட்டதுடன், இது குறித்து சுருக்கமான அறிக்கை (Summary Report) ஒன்றைக் கோருமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes