General16 June 2026

தமிழர் பகுதிகளில் மீட்கப்பட்ட ரூ.161 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளின் அளவீட்டுப் பணிகள் நிறைவு!

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையின் போது இலங்கை இராணுவத்தினரால் அந்தப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட, 161 இலட்சம் ரூபாய் பெறுமதியான பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்களின் அளவீட்டுப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று (16) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அறிவித்துள்ளது.

இந்தத் தங்க ஆபரணத் தொகுதி தற்போது இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

பத்தாயிரத்திற்கும் அதிகமான இந்தத் தங்க ஆபரணங்களை அளவீடு செய்து முடிப்பதற்குச் சுமார் ஒரு வருட காலம் எடுத்ததாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த தங்க ஆபரணங்கள் தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு இதன்போது உத்தரவிட்டார்.

விடுதலைப்புலிகள் முகாம்கள், சட்டவிரோத வங்கிகள் உள்ளிட்ட கட்டடங்களிலிருந்து மீட்கப்பட்டு, தற்போது இராணுவப் புலனாய்வுப் பணிப்பகத்தின் பொறுப்பில் உள்ள இந்தத் தங்க ஆபரணங்களை, தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண அதிகார சபையிடம் ஒப்படைத்துப் பரிசோதித்து, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் முந்தைய வழக்குத் தவணையின் போது உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes