General19 June 2026

எரிபொருள் மானியம் நீக்கப்பட்டால் வாழ்க்கைச் செலவு 11 வீதத்தால் அதிகரிக்கும்!" – ஐ.எம்.எப் அதிகாரியிடம் ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை

நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் எரிபொருள் மானியங்கள் அனைத்தையும் நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடன்பாட்டை எட்டியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கொழும்பு அலுவலகப் பொறுப்பதிகாரியைச் சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மானியக் குறைப்பு நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம் என நாணய நிதியத்திடம் தாம் மிகத் தெளிவாக வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

எரிபொருள் மானியம் முழுமையாக நீக்கப்பட்டால், அதன் விளைவுகள் நாட்டு மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமாக அமையுமென அவர் எச்சரித்துள்ளார்.

டீசல் விலை தோராயமாக 142 ரூபாவினால் அதிகரிக்கக் கூடும். அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும்.

மருந்து விலைகள் 7 வீதத்தால் அதிகரிக்கலாம் என அரசாங்கத் தரப்பில் கூறப்பட்ட போதிலும், இந்த ஒட்டுமொத்தப் பொருளாதார சுமையினால் நாட்டின் வாழ்க்கைச் செலவு மேலும் 11 வீதத்தால் உயரும் அபாயம் காணப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் வாழ முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலை நாட்டில் உருவாகும் என சர்வதேச நாணய நிதியத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதாக ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

IMF என்பது வெறும் வங்கி மட்டுமல்ல, நாட்டின் மக்களின் நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் அவதானம் செலுத்த வேண்டும் என இதன்போது கோரப்பட்டுள்ளது.

ஹேக்கர்களின் தலையீடு இன்றி, மத்திய திறைசேரியினால் அவுஸ்திரேலியாவின் போலி வங்கிக் கணக்கொன்றிற்கு அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி முறைகேடு மற்றும் சுமார் 12 தடவைகள் இடம்பெற்ற நிலக்கரி கொள்வனவு மோசடிகள் குறித்தும் இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

இவ்வாறான பாரிய நிதி மோசடிகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்றும், ஊழல்களைக் கண்டறிந்து தடுப்பதில் அவர்கள் அக்கறை காட்ட வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் மேலும் வலியுறுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes