General27 June 2026

அரசாங்கம் நிர்ணயித்த விலையை மீறிய வர்த்தகர்கள்: தம்புள்ளையில் இரு கடைகளுக்கு ரூ. 200,000 அபராதம்!

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடவும் கூடுதல் விலைக்கு கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த குற்றச்சாட்டில், தம்புள்ளை பகுதியில் இயங்கி வந்த இரண்டு வர்த்தக நிலையங்களுக்கு தலா 100,000 ரூபா வீதம், மொத்தம் 200,000 ரூபா அபராதம் விதித்து தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் மாத்தளை மாவட்ட அலுவலக அதிகாரிகள் தம்புள்ளையில் மேற்கொண்ட திடீர் சோதனைகளின் போது, குறித்த வர்த்தக நிலையங்களில் சட்டவிரோத விற்பனை இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டது.

இதில், தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்த மொத்த விற்பனை நிலையத்தில், 255 ரூபாவுக்கு விற்கப்பட வேண்டிய இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா ஒரு கிலோகிராம், 261 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், தம்புள்ளையில் உள்ள மற்றொரு சில்லறை விற்பனை நிலையத்தில், 260 ரூபா நிர்ணய விலை கொண்ட உள்நாட்டு கீரி சம்பா அரிசி, 360 ரூபா என்ற அதீத விலைக்கு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.

தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தங்களின் குற்றங்களை ஒப்புக்கொண்டதையடுத்து, நீதிமன்றம் இந்த அபராதத் தொகையை விதித்து தீர்ப்பளித்தது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதில் நுகர்வோர் விவகார அதிகார சபை மேற்கொண்டு வரும் இத்தகைய தொடர் நடவடிக்கைகள், பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes