General07 July 2026

வெனிசுவேலா நிலநடுக்கம்: 11 நாட்களாக வெறும் கைகளால் தேடி மகளின் உடலத்தை மீட்ட தந்தை!

வெனிசுவேலாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கப் பேரிடரில், மீட்புக் குழுவினரின் உதவி கிடைக்காத நிலையில், தந்தை ஒருவர் 11 நாட்களாகத் தனது வெறும் கைகளால் இடிபாடுகளைத் தோண்டி, உயிரிழந்த தனது 12 வயது மகளின் உடலத்தை மீட்டெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வெனிசுவேலாவின் லா குவைரா (La Guaira) பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து வீழ்ந்து பெரும் அழிவை ஏற்படுத்தின.

இதில் அலெக்சாண்டர் என்ற தந்தையின் பொதுக் குடியிருப்பு வீடும் முழுமையாக இடிந்து வீழ்ந்தது.

இடிபாடுகளுக்குள் அவரது 12 வயது மகள் சிக்கிக்கொண்டார்.

இந்தநிலையில் மீட்பு குழுவினரின் உதவி கிடைக்காத நிலையில் உறக்கமோ, உணவோ இன்றி திகைத்துப் போயிருந்த குறித்த தந்தை, தனது மகளை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்ற நோக்கில், இடிபாடுகளுக்கு இடையே வெறும் கைகளால் மண்ணையும் கொங்கிரீட் துகள்களையும் தோண்ட ஆரம்பித்தார்.

11 நாட்கள் தொடர்ச்சியாகப் போராடிய அவர், இறுதியாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மகளின் உடலத்தை இடிபாடுகளுக்குள் இருந்து மீட்டுள்ளார்.

சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட தனது மகளின் உடலத்தை பிளாஸ்டிக் பையில் ஏந்தியவாறு அந்தத் தந்தை கதறியழுத காட்சி இணையத்தில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes