General07 July 2026

நாடாளுமன்றத்திற்குள் விவசாய அமைப்புகள் வரத் தடையா? சபை நடுவே எதிர்க்கட்சித் தலைவருக்கும் அமைச்சருக்கும் இடையே காரசார விவாதம்!

நாடாளுமன்றத்தில் தமக்கிருக்கும் சிறப்புரிமைகள் குறித்தும், தம்மைக் காண வரும் விவசாய பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்ற அதிகாரிகள் தரப்பிலிருந்து முட்டுக்கட்டை போடப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இன்று (07) சபையில் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்ற அமர்வின் போது சிறப்புரிமைப் பிரச்சினை ஒன்றை எழுப்பிப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்,

"எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் சிறப்புரிமைகள் இருக்கின்றன. என்னை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்த விவசாய மக்களின் குரலுக்குச் செவிசாய்ப்பது அதில் ஒரு முக்கிய சிறப்புரிமையாகும். ஆனால், இன்று அவர்கள் என்னை நாடாளுமன்றத்தில் சந்திப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தடை செய்ய முடியுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர், அந்தச் சிறப்புரிமைகள் சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவானது எனக் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவரின் இந்தக் குற்றச்சாட்டை அடுத்து குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி, எதிர்க்கட்சித் தலைவருக்கே இந்நிலைமை என்றால் அது முற்றிலும் தவறானது என்றும், இதற்கு எதிராகத் தாங்களும் குரல் கொடுப்போம் என்றும் தெரிவித்தார்.

" சபாநாயகர் அவர்களே, அவ்வாறு தடுத்தது யார் என்று பெயரைக் குறிப்பிடச் சொல்லுங்கள். அது முற்றிலும் தவறான செயல். எதிர்க்கட்சித் தலைவருக்காக நாங்களும் குரல் கொடுப்போம். யார் அவ்வாறு செய்தது? அதிகாரிகள் தரப்பா?" என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர்,

நாளை (08) நாடாளுமன்றக் குழு அறையில் (Committee Room) தம்மைச் சந்திப்பதற்காக 'விவசாய கூட்டு முன்னணி' உள்ளிட்ட 42 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் வருகை தரவிருந்ததாகக் குறிப்பிட்டார்.

"நாடாளுமன்றத்திற்குள் வருவதற்கு அனுமதிப் பத்திரம் (Pass) பெறப்பட வேண்டும், வெறுமனே வருகை தர முடியாது என்பது உண்மைதான்.

ஆனால், 42 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் நாளைய தினம் என்னை நாடாளுமன்றக் குழு அறையில் சந்திப்பதற்கான அனுமதியைக் கோரியபோது, அந்த அனுமதியை வழங்கும் இடத்தில்தான் அதிகாரிகள் தரப்பால் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது.

அவர்கள் எவ்வாறு நாடாளுமன்றத்திற்குள் வர முடியும் எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது," என்று எதிர்க்கட்சித் தலைவர் சபையில் விளக்கமளித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes