General15 July 2026

சிகரெட் வரி குறைப்பால் ரூ.25 பில்லியன் வருமான இழப்பு: வெரிட்டே ரிசர்ச் தகவல்

உலக சுகாதார நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட மட்டத்தை விட இலங்கையில் சிகரெட்டுகளுக்கான வரி குறைவாக இருப்பதன் காரணமாக, 2025 ஆம் ஆண்டு முதல் இதுவரை அரசாங்கத்துக்கு கிடைக்க வேண்டிய 25 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள வருமான இழப்பு 8 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என அந்த கொள்கை பகுப்பாய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிகரெட் வரி அறவீடு மூலம் ஏற்படும் நிதி இழப்புகளைக் கண்காணிப்பதற்காக, வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட 'Cigarette Tax Leakage Tracker' எனும் இணைய வழி கண்காணிப்புத் தளத்தை அறிமுகப்படுத்திய போதே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளின்படி, புகையிலை நுகர்வை வெற்றிகரமாகக் குறைப்பதற்கும் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், ஒரு சிகரெட்டின் சில்லறை விலையில் குறைந்தபட்சம் 75% வரியாக அறவிடப்பட வேண்டும்.

இலங்கை 2018 ஆம் ஆண்டில் இந்த மட்டத்துக்கு நெருக்கமாக வந்திருந்தது. அப்போது சில்லறை விலையில் 74% வரியாக அறவிடப்பட்டது. இருப்பினும், அண்மைக்காலமாக அந்த வரி வீதம் குறைவடைந்துள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டு முதல் அது 67% என்ற மட்டத்திலேயே காணப்படுவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலைமையே பாரிய வருமான இழப்புக்கு வழிவகுத்துள்ளதாகத் தெரிவிக்கும் வெரிட்டே ரிசர்ச், கொள்கை வகுப்பாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிகரெட் வரி கொள்கைகளின் நிதித் தாக்கத்தை நேரலையில் கண்காணிப்பதற்கான வெளிப்படையான கருவியாக இந்தத் தளம் அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes