General15 July 2026

பொலித்தீன் பைகள் மீதான கட்டணத்தை முறையாக நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை

இலங்கையில் பொலித்தீன் பைகள் மீதான கட்டணத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யுமாறு, மத்திய சுற்றாடல் அதிகாரசபையை இலங்கை சூழலியல் நடவடிக்கை வலையமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பல்பொருள் அங்காடிகள், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் சிறு வணிகங்கள் மத்தியில் இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் முரண்பாடுகள், குறித்த கொள்கையின் நோக்கத்தையே பாதிப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


பொலித்தீன் பயன்பாட்டைக் குறைப்பதற்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட பொலித்தீன் பை கட்டண முறையை வரவேற்கும் அதேவேளை, பல வணிக நிறுவனங்கள் இதுவரை இலவசமாகவே பொலித்தீன் பைகளை வழங்குவதாக அல்லது சீரற்ற முறையில் கட்டணத்தை அறவிடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்தாத வணிக நிறுவனங்கள் மீது, மத்திய சுற்றாடல் அதிகாரசபை தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொலித்தீன் பைகளுக்கான கட்டணத்தின் சுற்றுச்சூழல் நன்மைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், துணிப் பைகள் மற்றும் மக்கும் தன்மையுடைய பைகள் போன்ற சூழல் நட்பு மாற்றுகளைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொலித்தீன் மாசுபாடு இலங்கையின் ஆறுகள், கடற்கரைகள், வனவிலங்குகள் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குத் தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருப்பதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes