General09 August 2026

இஸ்ரேலில் உணவகம் மற்றும் புனரமைப்புத் துறை வேலைவாய்ப்பு: நாளை முதல் பதிவுகள் ஆரம்பம்!

இஸ்ரேலின் உணவகம் (Restaurant) மற்றும் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான தொழிலாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பதிவுகள் ஸ்ரீலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் (www.slbfe.lk) நாளை (10) திறக்கப்படவுள்ளன.

அதன்படி, உணவகத் துறைக்கான பதிவுகள் நாளை நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மொத்தம் 4,000 பேர் மட்டுமே பதிவு செய்யப்படவுள்ளனர்.

இதற்கு 25 முதல் 40 வயதுடைய ஆண்கள் விண்ணப்பிக்க முடியும். சமையலறையில் குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம், 8 ஆண்டுகள் பாடசாலைக் கல்வி, நல்ல ஆங்கில அறிவு மற்றும் பாரம் தூக்குதல், நின்று வேலை செய்தல் போன்றவற்றுக்கான உடல் ஆரோக்கியம் என்பன அவசியமாகும்.

மேலும், விண்ணப்பதாரரோ அல்லது அவரது குடும்பத்தினரோ (பெற்றோர், மனைவி, பிள்ளைகள்) இதற்கு முன்னர் இஸ்ரேலில் பணிபுரிந்திருக்கக் கூடாது.

அதேவேளை, புனரமைப்புத் துறைக்கான பதிவுப் பக்கம் நாளை பிற்பகல் 2.00 மணிக்கு திறக்கப்படவுள்ளது. ஜிப்சம் வேலைகள், மின்சாரப் பெட்டிகள் பொருத்துதல் மற்றும் கல் சுவர் கட்டுதல், நிறப்பூச்சு வேலைகள், டைல்ஸ் ஒட்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் மொத்தம் 12,000 தொழிலாளர்கள் பதிவு செய்யப்படவுள்ளனர்.

25 முதல் 45 வயதுடைய, 10 ஆண்டுகள் பாடசாலைக் கல்வியும் அடிப்படை ஆங்கில அறிவும் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். முன்னர் புனரமைப்புத் துறைக்கான தேர்வில் தோற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்ற போதிலும், பிற துறைகளுக்கு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் திறமைகளை இஸ்ரேலியப் பிரதிநிதிகளே நேரடியாகப் பரிசோதிப்பார்கள் என்பதால், விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு உண்மையிலேயே அனுபவமும் தகுதியும் உள்ள துறைக்கு மட்டுமே விண்ணப்பிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes