General10 August 2026

22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை - ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசனை

உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிப்பது உள்ளிட்ட திருத்தங்களை உள்ளடக்கிய 22 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவு சட்டமூலத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்கு மத்தியில், குறித்த அரசியலமைப்பு திருத்த வரைவு சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார,

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் திருத்தத்தை தமது கட்சி தொடர்ச்சியாக எதிர்த்து வருவதாகத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பைக் கட்டியெழுப்பும் வகையில் அரசியல் பிரசாரங்கள் மற்றும் போராட்டங்களை ஏற்பாடு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், "நாங்கள் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து செயற்படுகிறோம். அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து எமது சட்டத்தரணிகளுடன் தொடர்ச்சியாக கலந்தாலோசித்து வருகிறோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes