Entertainment13 July 2026

திருமலை நாயக்கர் காலத்து பிரம்மாண்டம்: சிதைவிலிருந்து மீட்கப்படும் வண்டியூர் தெப்பக்குள நீராழி மண்டபம்!

மதுரையின் முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் அமைந்துள்ள நீராழி மண்டபத்தின் கோபுரத்தை சீரமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபகாலமாக மண்டபத்தின் மையக் கோபுரத்தின் மேல்பகுதியில் சில கற்கள் உடைந்து விழும் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, தொல்லியல் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில், கோபுரத்தை பாதுகாப்பாகவும், அதன் வரலாற்றுச் சிறப்பை பாதிக்காமலும் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

வரலாற்றுக் குறிப்புகளின்படி, திருமலை நாயக்கர் அரண்மனையை அமைப்பதற்குத் தேவையான மணல் இந்தப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது.

இதனால் உருவான பள்ளத்தை சீரமைக்கும் நோக்கில், கி.பி. 1645-ஆம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் அந்த இடத்தை சதுர வடிவிலான தெப்பக்குளமாக மாற்றியதுடன், அதன் மையத்தில் அழகிய நீராழி மண்டபத்தையும் அமைத்தார்.

இன்று வரை அந்த மண்டபம் மதுரையின் பாரம்பரியக் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.

சுமார் 304.8 மீட்டர் நீளமும் அகலமும் கொண்ட இந்தத் தெப்பக்குளம், நான்கு புறங்களிலும் சுமார் 15 அடி உயரமுள்ள கல் சுவரால் சூழப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பக்கத்திலும் 12 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு தெப்பக்குளத்தின் மையத்தில் தோட்டத்துடன் கூடிய நீராழி மண்டபமும், அதனுள் விநாயகர் கோவிலும் அமைந்துள்ளன.

ஆண்டுதோறும் நடைபெறும் தெப்பத் திருவிழாவின்போது இந்த மண்டபம் பக்தர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் வெகுவாகக் கவர்கிறது.
Related recommendation
Hiru TV News | Programmes