Sports06 July 2026

பிரேசில் வெளியேற்றம் - நோர்வே காலிறுதிக்கு முன்னேற்றம்!

கால்பந்து கிண்ணத் தொடரின் 16 அணிகளின் (Round of 16) சுற்றில், பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக வீழ்த்தி நோர்வே அணி காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

நியூயோர்க் நியூ ஜேர்சி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி நிமிடங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆட்டங்களை மாறி மாறி வெளிப்படுத்திய போதிலும், முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் எதனையும் அடிக்க முடியவில்லை.

இதனால் முதல் பாதி ஆட்டம் 0 - 0 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றது.

இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் போக்கை மாற்றிய நோர்வே அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் (E. Haaland) 79 ஆவது நிமிடத்தில் அணியின் முதலாவது கோலை அடித்து முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

தொடர்ந்து ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் அவர் தனது இரண்டாவது கோலையும் அடித்து பிரேசில் அணிக்கு அதிர்ச்சியளித்தார்.

நோர்வே 2 - 0 என முன்னிலையில் இருந்த நிலையில், போட்டியின் மேலதிக இழப்பீட்டு நேரத்தில் (90'+10 ஆவது நிமிடத்தில்) பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு ஒன்று கிடைத்தது.

இதனைச் சாதகமாக்கிக் கொண்ட பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் ஒரு கோலை அடித்தார்.

எனினும், போட்டியின் இறுதிவரை பிரேசில் அணியால் ஆட்டத்தைச் சமநிலைப்படுத்த முடியாமல் போனதால், 2 - 1 என்ற கோல் கணக்கில் நோர்வே அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
Related recommendation
Hiru TV News | Programmes