General06 July 2026

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலுக்கு போதைப்பொருள் கடத்தல் காட்டிக்கொடுப்பே காரணமாம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையின் உள்ளே நிலவிய பதற்ற நிலைமை சிறைச்சாலை அதிகாரிகளால் முழுமையாகச் சமரசத்துக்கு கொண்டுவரப்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு குழு மோதல் மட்டுமே தவிர, இதில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லையென அவர் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன், சிறைச்சாலையின் உள்ளே இருக்கும் கைதிகள் அனைவரும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அமைதியாக இருக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மோதலின் போது சிறைச்சாலையின் கூரை மீது ஏறி எதிர்ப்புத் தெரிவிக்க முயன்ற கைதிகள் சிலர், கூரை உடைந்து கீழே வீழ்ந்ததன் காரணமாகவே காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, சிறைச்சாலைக்குள் இடம்பெற்று வந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரம் ஒன்று காட்டிக்கொடுக்கப்பட்டமையே இந்த மோதலுக்குக் காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

'பூருமூனா' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினருடன் நெருங்கிய தொடர்புடைய சுரேஷ் புஷ்பகுமார எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரே இந்த மோதலை வழிநடத்தியுள்ளார் என காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட இந்த மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 34 க்கும் அதிகமான கைதிகள் காயமடைந்து நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

மோதலின் போது கைதிகள் சிறைச்சாலையிலுள்ள மருந்துப் களஞ்சியசாலையை உடைத்து, அங்கிருந்த வலி நிவாரணி மருந்துகளைப் பருகியுள்ளதுடன், சிறைச்சாலை அலுவலகத்தின் பூட்டுகளை உடைத்து அங்கிருந்த உபகரணங்களுக்கும் சேதம் விளைவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது,.

நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை விசேட அதிரடிப்படையினரும் கலகத் தடுப்புப் பிரிவினரும் சிறைச்சாலை வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes