General03 January 2026

வெனிசுவேலா நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதியும் அவரது மனைவியும்

தென் அமெரிக்க நாடான வெனிசுவேலா மீது அமெரிக்க ராணுவம் மிகப்பெரிய அளவிலான தாக்குதலை நடத்தி, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இன்று அதிகாலை தலைநகர் காரகாஸ் உள்ளிட்ட பல இடங்களில் அமெரிக்கப் படைகள் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தின.

இந்த அதிரடி நடவடிக்கையின் போது மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, ஏற்கனவே வெனிசுவேலா நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கச் சட்ட அமுலாக்கத் துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த இரகசிய நடவடிக்கை குறித்த கூடுதல் விபரங்களை வழங்க, இன்று புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ இல்லத்தில் ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து வெனிசுவேலா முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தலைநகரில் பல இடங்களில் தீப்பரவலும் புகையும் காணமுடிவதாக தெரிவித்துள்ளது.

வெனிசுவேலா அரசாங்கம், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை "கடுமையான இராணுவ ஆக்கிரமிப்பு" என வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், நாடு தழுவிய அவசர நிலையை அறிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் மதுரோவைத் தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்தப் பத்தாண்டு காலப் பதற்றம் தற்போது இராணுவ நடவடிக்கையாக மாறியுள்ளது.

அண்டை நாடான கொலம்பியா மற்றும் கியூபா போன்ற நாடுகள் இந்தத் தாக்குதலைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

1990களில் பனாமா ஜனாதிபதி கைது செய்யப்பட்டதற்குப் பிறகு, ஒரு நாட்டின் ஜனாதிபதி அமெரிக்காவால் இவ்வாறாகச் சிறைபிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
Related recommendation
Hiru TV News | Programmes