General30 April 2026

உயிருக்குப் போராடும் ஆப்கானிஸ்தான் முன்னாள் வீரர்! இரத்த தானம் செய்ய அவசர வேண்டுகோள்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷாபூர் சத்ரான் (Shapoor Zadran), டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

30 வயதான அவருக்கு 'ஏ பொசிட்டிவ்' (A-positive) வகை இரத்தம் அவசரமாகத் தேவைப்படுவதால், அவரது குடும்பத்தினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

ஷாபூர் சத்ரான் Hemophagocytic Lymphohistiocytosis (HLH) எனப்படும் மிகவும் அரிதான மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் இந்த நோயின் நான்காம் கட்டத்தில் (Stage 4) உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் பலவீனமடைந்துள்ளதோடு, இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துள்ளது.

அண்மையில் அவருக்கு டெங்கு பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஷாபூர் நோய்வாய்ப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் மற்றும் அந்தநாட்டு கிரிக்கெட் சபை (ACB) தலைவர் மிர்வாய்ஸ் அஷ்ரப் ஆகியோரின் உதவியுடன், விசா நடைமுறைகள் விரைவுபடுத்தப்பட்டு ஜனவரி 18 அன்று அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த மார்ச் மாதம் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே அவருக்கு நான்காம் கட்ட HLH நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது வழங்கப்பட்டு வரும் மருந்துகள் ஓரளவுக்குப் பலன் அளிப்பதாக அவரது குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes