International01 May 2026

ஈரானுடன் மீண்டும் போர்: இஸ்ரேலில் வலுக்கும் கோரிக்கை - இராணுவத் தளமாக மாறும் நாடு!

ஈரானுடன் மீண்டும் நேரடிப் போரில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இஸ்ரேலில் பாரிய பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஒரு இராஜதந்திர உடன்படிக்கையை விடவும், மீண்டும் போருக்குச் செல்வதே இஸ்ரேலின் மூலோபாய இலக்குகளுக்குச் சிறந்தது என அந்நாட்டு அரசியல் மற்றும் இராணுவத் தரப்பு கருதுவதாகத் தெரிகிறது.

ஈரானுடனான மோதலில் தங்களது செல்வாக்கை இழந்துவிட்டதாகக் கருதும் இஸ்ரேலிய அரசியல்வாதிகள், இந்தப் போர்ச் சூழலைத் தங்களது பலத்தை மீள நிரூபிக்கும் வாய்ப்பாகக் கருதுகின்றனர்.

இஸ்ரேலின் முக்கிய இலக்கு ஈரானின் யுரேனியம் செறிவூட்டலைத் தடுப்பது மட்டுமல்ல, மாறாக ஈரானின் தற்போதைய ஆட்சி முறையை முற்றாகச் சிதைப்பதே அவர்களின் நீண்டகால நோக்கமாக உள்ளது.

தற்போது இஸ்ரேல் ஒரு பாரிய இராணுவத் தளம் போலவே இயங்கி வருகிறது.

கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 6,500 தொன் எடையுள்ள வெடிபொருட்கள் மற்றும் இராணுவத் தளபாடங்கள் இஸ்ரேலுக்கு வந்து சேர்ந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்குச் சொந்தமான பல எரிபொருள் தாங்கிக் கப்பல்கள் மற்றும் வானூர்திகள் டெல் அவிவ் மற்றும் எய்லாட் வானூர்தி நிலையங்களில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் போரை விரும்பினாலும், இதற்கான இறுதி அதிகாரம் இஸ்ரேலியப் பிரதமரிடம் இல்லை. மாறாக அமெரிக்க ஜனாதிபதியின் கைகளிலேயே உள்ளது.

அமெரிக்காவின் நேரடி ஆதரவு மற்றும் அனுமதி இன்றி இஸ்ரேல் ஒரு பாரிய போரை முன்னெடுப்பது கடினம் எனக் கருதப்படுகிறது.

ஆயினும், தற்போதைய சூழலில் ஈரானுடன் ஒரு உடன்படிக்கைக்கு வருவதை விடவும், மோதலில் ஈடுபடுவதே தங்களுக்கு லாபகரமானது என இஸ்ரேலியத் தரப்பு உறுதியாக நம்புவதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes