General01 May 2026

"பொய்கள் போதாதென்று திருட்டுகளும்": தற்போதைய அரசைச் சாடிய ரணில் விக்ரமசிங்க

ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (01) மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் நடத்தப்படும் மே தினக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தற்போதைய அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தனது செய்தியில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடந்த கால ஆட்சியை ஊழல் மற்றும் மோசடிகள் நிறைந்ததாகச் சாடியுள்ளார்.

நிலக்கரி மோசடி மற்றும் மத்திய திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (25 இலட்சம் டொலர்கள்) திருடப்பட்டமை ஆகியவை அண்மைய காலத்தின் பாரிய ஊழல்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்றும், வாழ்க்கைச் செலவு விண்ணைத் தொட்டுள்ள நிலையில் ஆளும் தரப்பினர் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சியினர் குரல் எழுப்ப இடமளிக்கப்படாமல் அச்சுறுத்தல்கள் மூலம் ஆட்சி நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தோல்வி பயத்தினால் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இம்முறை மே தினத்திற்காகத் தெரிவு செய்துள்ள உருட்டு, பிரட்டு, திருட்டு என்ற வாசகம் தற்போதைய சூழலுக்கு மிகவும் பொருத்தமானது என ரணில் விக்ரமசிங்க பாராட்டியுள்ளார்.

இந்த வாசகத்தை உள்ளூராட்சி சபைகள் ஊடாக அடிமட்ட மக்கள் வரை கொண்டு செல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பௌத்த உரிமைகள் மீறப்படுவதாகவும், கத்தோலிக்க திருச்சபைக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நீண்டகால மரபுகள் மீறப்படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

1977 ஆம் ஆண்டு முதல் ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாச ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் தற்போது முடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்துச் செய்தியின் இறுதியில், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து பயணிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறும் ரணில் விக்ரமசிங்க நினைவூட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes