General07 May 2026

இலங்கையின் தனியார் பேருந்து துறையில் பாரிய மாற்றம் : மின்சார பேருந்து சேவை ஆரம்பம்!

இலங்கையின் தனியார் பேருந்து துறை எதிர்கொண்டுள்ள நிதி மற்றும் தொழில்நுட்ப நெருக்கடிகளுக்குத் தீர்வாக, மின்சார பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், அம்கொட் கார்ப்பரேஷன் மற்றும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றிற்கு இடையே நேற்று (06) கையெழுத்தானது.

அடுத்த இரண்டு மாதங்களுக்குள் 100 சொகுசு மின்சார பேருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படும். இவை 32 ஆசனங்களைக் கொண்ட குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்துகளாகும்.

ஆரம்ப கட்டத்தில் இந்தப் பேருந்து ஹொரண மற்றும் கொழும்புக்கு இடையிலான பாதையில் இயக்கப்படவுள்ளன. சூரிய சக்தியைப் பயன்படுத்தி இந்த பேருந்துகள் மின்னேற்றம் செய்யப்படவுள்ளது.

இதனை 45 நிமிடங்களில் முழுமையாக மின்னேற்றம் செய்ய முடியும். ஒருமுறை மின்னேற்றம் செய்தால் 350 கிலோமீட்டர் தூரம் பயணிக்கலாம் (ஹொரண - கொழும்பு இடையே சுமார் 6 பயணங்கள்) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக குறித்த பாதையில் சுமார் 200 மின்னேற்ற நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. மேலும், இந்த பேருந்துகளுக்கு 7 வருட உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இது குறித்து தெரிவிக்கையில்,

நீண்ட தூர பேருந்துகளின் வருமானத்தில் 75 வீதம் எரிபொருளுக்கே செலவாகிறது.

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் நிலவும் தொழில்நுட்ப சிக்கல்களால் டீசலில் கந்தகத்தின் அளவு அதிகரித்துள்ளது. இது நவீன ரக பேருந்துகளின் இயந்திரங்களை பாதிப்படையச் செய்கிறது.

வற் வரி 20 வீதமாக அதிகரித்தமை மற்றும் டயர்களின் விலை உயர்வால் பேருந்து உரிமையாளர்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

அம்கொட் கார்ப்பரேஷன் தலைவர் ஹெர்பி சில்வா தெரிவிக்கையில், ஒரு வருட காலத்திற்குள் ஹொரண பகுதியில் உள்ள தொழிற்சாலையில் மின்சார பேருந்துகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இலங்கையின் பேருந்து தேவையில் 30 சதவீதத்தை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்யவும், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மின்சார வாகனங்களை ஏற்றுமதி செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்துகளுக்குத் தேவையான உதிரிப்பாகங்களில் 50 சதவீதத்தை உள்நாட்டு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் முயற்சியாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes