International07 May 2026

'ஒபரேஷன் சிந்தூர்' ஓராண்டு நிறைவு - சமூக ஊடகங்களின் முகப்பு படங்களை மாற்றி பிரதமர் மோடி பெருமிதம்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட 'ஒபரேஷன் சிந்தூர்' இராணுவ நடவடிக்கை இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது.

இதனை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக ஊடகப் பக்கங்களின் முகப்புப் படங்களை மாற்றி, இராணுவத்தினரின் வீரத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

புதிய முகப்புப் படத்தில் இந்திய மூவர்ணக் கொடி இடம்பெற்றுள்ளது. அத்துடன் 'Sindoor' என்ற வார்த்தையில் உள்ள 'O' எனும் எழுத்து, இந்துப் பெண்களின் மங்கலச் சின்னமான குங்குமத்தால் (சிந்தூர்) நிரப்பப்பட்டுள்ளது.

இது பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட்டதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"ஓராண்டுக்கு முன்பு, #OperationSindoor# நடவடிக்கையின்போது நமது பாதுகாப்புப் படைகள் அபார வீரத்தை வெளிப்படுத்தி, எமது மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்குக் கடுமையான பதிலடி கொடுத்தனர்.

ஒவ்வொரு இந்தியரும் நமது படைகளைக் குறித்துப் பெருமை கொள்கிறார்கள்.

நமது படைகளுக்கும், அவர்கள் அடைந்த வெற்றிக்கும் மரியாதை செலுத்தும் விதமாக, நாம் அனைவரும் எமது சமூக ஊடகங்களின் முகப்புப் படங்களை இந்தப் படத்திற்கு மாற்றுவோம்." என பதிவிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes