General07 May 2026

பெரும்பான்மையை பேரவையில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ்பவனில் அல்ல - கமல்ஹாசன்

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் பின்னர் ஆட்சி அமைப்பதில் நிலவி வரும் இழுபறி நிலை குறித்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் அவர்கள் தனது 'எக்ஸ்' தளத்தில் காட்டமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் மக்கள் முழுமையான அதிகாரத்தை வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், தற்போதைய சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசியல் முதிர்ச்சியைப் பாராட்டியுள்ளார். "மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம், பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்" என்ற ஸ்டாலினின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவரை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும் என கமல்ஹாசன் சாடியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட 233 உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருப்பது மாநிலத்திற்கு நேரும் அவமானம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரபலமான 'எஸ்.ஆர். பொம்மை' வழக்கின் தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ள அவர், "ஒரு கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதைச் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டுமே தவிர, ஆளுநர் மாளிகையில் (ராஜ் பவன்) அல்ல" என உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளதை நினைவூட்டியுள்ளார்.

இது வெறும் கட்சி அரசியல் அல்ல, ஒரு இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் என்று குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் எனத் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் புதிய அரசு அமைவதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைகள் குறித்து தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் வகையில் கமல்ஹாசனின் இந்தப் பதிவு அமைந்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes