International07 May 2026

மாறிவரும் அரசியல் சதுரங்கம் - விஜய்யைத் தொடர்ந்து ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு நாட்கள் கடந்த நிலையிலும், புதிய அரசு அமைவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், பெரும்பான்மையை நிரூபிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.

தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்துப் பேசினார்.

சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், ஆட்சி அமைக்க உரிமை கோரி விஜய் முன்வைத்த வாதங்களுக்கு ஆளுநர் பல்வேறு கேள்விகளை முன்வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

"112 எம்எல்ஏ-க்களின் (த.வெ.க 108 + காங்கிரஸ் 4) ஆதரவை வைத்துக்கொண்டு, ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற பெரும்பான்மையை எவ்வாறு எட்டுவீர்கள்?"

"யூகங்களின் அடிப்படையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது. 118 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை முதலில் சமர்ப்பிக்க முடியுமா?"

"நிலையான அரசை வழங்குவதற்கான பலம் உங்களிடம் உள்ளதா?"

இதற்குப் பதிலளித்த விஜய், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் எனவும், பதவியேற்ற பிறகு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும், விஜய்யின் விளக்கங்களில் ஆளுநர் முழுமையான திருப்தி அடையவில்லை எனக் கூறப்படுகிறது.

விஜய் - ஆளுநர் சந்திப்பு முடிந்துள்ள நிலையில், அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்திக்கிறார். அடுத்தபடியாக, ஸ்டாலினுக்கும் ஆளுநர் அழைப்பு விடுத்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக ஆட்சி அமைக்க விஜய்யிடம் பெரும்பான்மை இல்லை என ஆளுநர் கூறியுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற இருக்கிறது.

தமிழக அரசியல் நிகழ்வு நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes