General08 June 2026

பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

"பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சனின் விடுதலை தொடர்பான விடயத்தினை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன்.

தனது இனத்தின் வரலாற்று வலிகளையும், இழப்புகளையும், மன உணர்வுகளையும் இசை மற்றும் பாடல் வழியாக வெளிப்படுத்திய ஓர் இளைஞன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழ் மக்களிடையே மிகுந்த அதிருப்தியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கலைப் படைப்பின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை குற்றமாகக் கருதி, அதற்காக ஓர் இளைஞனின் சுதந்திரம் பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது, இந்த நாட்டில் தமிழர்கள் எதிர்கொள்ளும் கருத்துரிமைச் சவால்களின் தீவிரத்தையே எடுத்துக்காட்டுவதாக மக்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக, தமிழ் மக்களினதும் இளைஞர்களினதும் நம்பிக்கையையும் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பையும் அடித்தளமாகக் கொண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இத்தகைய கைது இடம்பெற்றிருப்பது, தமிழ் மக்களின் மனங்களில் ஆழமான ஏமாற்றத்தையும் நம்பிக்கைச் சிதைவையும் ஏற்படுத்தியுள்ளது.


சமத்துவம், நீதி, ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றை முன்னிறுத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் இவ்வாறான நடவடிக்கைகளால் கேள்விக்குள்ளாகின்றன.

கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலங்களில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகளும் கூட, தமிழர் ஆயுதப் போராட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாடல்கள், நினைவுகள் மற்றும் அரசியல் குறியீடுகள் காணப்பட்ட சூழல்களில் மக்களின் ஆதரவை நாடியமை மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும்.


அவ்வாறிருக்க, இன்று ஒரு இளைஞன் பாடல் ஒன்றை வெளியிட்டதற்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது, சட்டத்தின் பயன்பாடு தொடர்பில் பாரிய முரண்பாடுகளையும் நியாயப்பூர்வமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இந்தக் கைது நடவடிக்கை சங்கீத்சன் என்ற இளைஞனின் தற்போதைய சுதந்திரத்தை மட்டுமல்லாது, அவரது எதிர்காலக் கல்வி, தொழில், சமூக வாழ்வு மற்றும் கலைப் பயணத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

அதேவேளை, அவரது குடும்பமும் மிகுந்த மன உளைச்சலுக்கும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றமை துயர்மிகுந்த விடயமாகும்.

ஒரு ஜனநாயக நாட்டின் உயரிய பொறுப்பில் அமர்ந்திருக்கும் தாங்கள், சட்டத்தின் ஆட்சியை மதிப்பதோடு மட்டுமல்லாது, நீதியின் உயிரையும் மனிதாபிமானத்தின் விழுமியங்களையும் காக்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பையும் சுமக்கின்றீர்கள்.

இவ்விடயத்தில் மனிதாபிமான அடிப்படையிலும், நல்லிணக்கத்தின் அடிப்படையிலும், நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமநீதியை உறுதிப்படுத்தும் அடிப்படையிலும் தங்களது நேரடி தலையீட்டின் மூலம், கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சனுக்கு அரசியலமைப்புச் சட்ட அதிகாரங்களின் கீழ் பொது மன்னிப்பு வழங்குவதன் மூலம் உடனடி விடுதலையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

இத்தகைய மனிதாபிமானமான தீர்மானமொன்று தமிழ் மக்களின் மனங்களில் நீதியின் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதோடு மட்டுமல்லாது, இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தையும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்தும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது." என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Related recommendation

"அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்க ஊடக அடக்குமுறை!" அரசாங்கம் தோல்வியை மறைக்க ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் 35,000-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களிலும், வாடகை வீடுகளிலும், கூடாரங்களிலும் மிகவும் அவலமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு, நிலையான வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் இதுவரை எவ்வித முறையான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் தனது நிர்வாகத் தோல்விகளையும், பொய்களையும் மூடிமறைப்பதற்காக ஊடகங்களையும், மாற்றுக்கருத்துடையவர்களையும் ஒடுக்கும் அரசியல் ரீதியான அடக்குமுறைகளை கையாண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் ஊழல்களின் சுமையை பொதுமக்கள் மீதே அரசாங்கம் சுமத்தி வருகின்றது. நாளுக்கு நாள் எரிபொருள் விலை மற்றும் வரிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றக் குழு கூட்டங்களின் போது அரசாங்கத்தின் நிதி முறைகேடுகள் அம்பலமாகின்ற போதிலும், அதற்கான தீர்வாக பொதுமக்கள் மீதே மேலும் வரிச்சுமைகள் சுமத்தப்படுவதாக அவர் விசனம் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், உள்நாட்டு விவசாயிகளையும், உற்பத்தியாளர்களையும் வலுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது. புதிய முதலீடுகளை ஈர்க்கவோ அல்லது புதிய தொழிற்சாலைகளை உருவாக்கவோ முடியாத நிலையில் தற்போதைய நிர்வாகம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் இத்தகைய திட்டமிடப்படாத, தன்னிச்சையான அரசியல் செயல்பாடுகளினால் நாட்டின் எதிர்காலம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பெரும் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தோல்வியை மறைக்க ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி...
Read more
Hiru TV News | Programmes