General10 June 2026

ஆடி அமாவாசை தினத்தைப் பொது விடுமுறையாகப் பிரகடனப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை: பரிசீலித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்கிறார் அமைச்சர்!

இந்துக்களின் புனித நாளான ஆடி அமாவாசை தினத்தை அரச பொதுவிடுமுறை நாளாகப் பிரகடனப்படுத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றக் குழு அறையில் இன்று (09) நடைபெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பற்றிய அமைச்சர் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இக்கோரிக்கையை உரிய முறையில் பரிசீலித்து, விரைவில் முடிவை அறிவிப்பதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி பதிலளித்துள்ளார்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"ஆடி அமாவாசை என்பது இந்துக்களின் ஓர் புனித நாளாகும். இந்நாளில் இந்துக்கள் தமது முன்னோர்களுக்காக, குறிப்பாக இறந்த தந்தையர்களுக்காக விரதமிருந்து திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து தமது பிதிர்க்கடன்களை நிறைவேற்றி ஆசி பெறுகின்றனர்.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் இந்துக்களின் புனித நாளான ஆடி அமாவாசை தினத்திற்குப் பொதுவிடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

அதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. இருப்பினும், இந்த நாட்டில் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலம் முடிவிற்கு வந்த பிற்பாடு இந்த நாளுக்குப் பொது விடுமுறை வழங்கப்படுவதில்லை.

மாதம் தோறும் பௌர்ணமிக்கு விடுமுறை வழங்கும் இலங்கை அரசு, வருடத்தில் ஒரு நாள் வருகின்ற ஆடி அமாவாசைக்கு பொது விடுமுறை வழங்கத் தவறியிருப்பது இந்துக்களுக்குப் பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, இந்துக்கள் தமது புனித நாளில் இடர்பாடுகளின்றி, நிம்மதியாக வழிபாடுகளை மேற்கொள்வதற்காக இதனைப் பொது விடுமுறை நாளாக இலங்கை அரசு பிரகடனப்படுத்த வேண்டும்" என வலியுறுத்தினார்.

அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சரின் பதில்

இக்கோரிக்கைக்குப் பதிலளித்த புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர், சமய ரீதியாக இந்த விடயங்களைக் கையாள்வதற்கென விசேட குழுவொன்று இருப்பதாகத் தெரிவித்தனர்.

ஆடி அமாவாசை புனித நாளினை அரச விடுமுறையாகப் பிரகடனப்படுத்துவது தொடர்பான விடயம் அந்தக் குழுவிற்குப் பாரப்படுத்தப்பட்டு பரிசீலிக்கப்படும் என்றும், அதன் பின்னர் அக்குழுவின் பரிசீலனை முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
Related recommendation
Hiru TV News | Programmes