General10 June 2026

பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்- ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ எனப் போற்றப்பட்ட பாரதிராஜா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாரதிராஜாவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்படப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சென்னையின் நீலாங்கரையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன், குடும்பத்தினருக்கு தனது ஆறுதலையும் தெரிவித்தார்.

இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலினுடன் மூத்த திமுக தலைவர் டி.ஆர். பாலு மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோரும் உடனிருந்தனர்.

இதனிடையே, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது இரங்கல் செய்தியில்,

“புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவால் மிகுந்த துயரமடைந்தேன். கிராமிய வாழ்வியலையும் மனித உணர்வுகளையும் உண்மைத் தன்மையுடன் வெளிப்படுத்திய அவரது படைப்புகள் தமிழ்த் திரைப்பட உலகில் அழியாத தடம் பதித்துள்ளன. அவரது குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோரும், நடிகைகள் ரேவதி, ராதிகா, சுகன்யா உள்ளிட்ட பலரும் நேரில் சென்று பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கிராமிய வாழ்க்கையை திரையில் உயிர்ப்பித்து தமிழ் சினிமாவுக்கு புதிய அடையாளத்தை உருவாக்கிய பாரதிராஜாவின் மறைவு, தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes