General10 June 2026

வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துக - ரவிகரன் எம்.பி வலியுறுத்து

வடபகுதிக் கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்குமாகாண கடற்றொழிலாளர்கள் மிகவும் பாவப்பட்டவர்கள் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என வடமாகாணத்தில் நான்கு மாவட்டங்களிலும் மீனவர்கள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத தடைசெய்யப்பட்ட தொழில்களான சுருக்குவலை, வெளிச்சம்பாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபடல் , டைனமெற் வெடிவைத்து கடற்றாழிலில் ஈடுபடல் போன்ற தீய செயல்களால் வடபகுதிக் கடல்வளம் முற்றாக அழிந்துபோகின்றது.

இத்தகைய சட்டவிரோத தொழில்களைத்  தடுக்கவேண்டிய கடற்றொழில் திணைக்களமோ, கடற்படையோ செயலற்றவர்களாக இருக்கின்றனர்.

இதுகுறித்த கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் கேட்டால், ஆளணிப்பற்றாக்குறை இருப்பதாகவும், ஆளணிக்கு ஏற்ப செயற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

கடற்றொழில் அமைச்சரிம் இதுதொடர்பில் நாம் ஏற்கனவே கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். எனவே இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி உரியவகையில் சீர்செய்யவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes