General11 June 2026

பயங்கரவாதத் தடை சட்டத்தை முழுமையாக இரத்து செய்யக் கோரி சாணக்கியன் தனி நபர் பிரேரணை!

பயங்கரவாதத் தடை சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிகள் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

இந்தப் பிரேரணை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டுள்ள போதிலும், இதுவரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவோ அல்லது வர்த்தமானியில் வெளியிடப்படவோ இல்லை.

1979 ஆம் ஆண்டில் தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்டு பின்னர் நிரந்தரமாக்கப்பட்ட இந்த சட்டம், குறிப்பாக தமிழ் - முஸ்லிம் சமூகங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு, பல தசாப்தங்களாக மனித உரிமை மீறல்களுக்கும் தன்னிச்சையான கைதுகளுக்கும் வழிவகுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சட்டத்தை வெறும் திருத்தங்களுக்கு உட்படுத்துவதோ அல்லது புதிய பெயரில் மாற்றுவதோ தீர்வாகாது.

நாட்டில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயக ஆட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கான அரசியல் உறுதிப்பாட்டை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் இடம்பெற்று அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes