General11 June 2026

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்வது குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

எதிர்காலத்தில் எல்-நினோ காலநிலை நிலைமையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்கான நிறுவன ரீதியிலான திட்டங்கள் குறித்த கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் உள்ளிட்ட முக்கிய அரச நிறுவனங்களின் பிரதானிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

எல்-நினோ நிலைமையால் நாட்டின் உணவுப் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் வலுசக்தி ஆகிய துறைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அவசர நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இம்முறை ஏற்படும் எல்-நினோ தாக்கமானது 2016-2017 காலப்பகுதிக்கு நெருக்கமானதாக இருக்கக்கூடும் என்பதால் விசேட நீர் முகாமைத்துவத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போதைய நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவை விவசாயம், குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்காக முறையாகப் பயன்படுத்துவது குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

இதேவேளை நிலவும் காலநிலை அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு, 2026 ஆம் ஆண்டின் சிறுபோக விவசாய நடவடிக்கைகளை வழமைக்கு மாறாகச் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்னதாகவே ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

வரவிருக்கும் மாதங்களில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்தல், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பைப் பேணுதல், குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான முறையான திட்டங்களைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

'டித்வா' சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு யுத்த சூழ்நில சவால்களை எதிர்கொண்டதைப் போன்றே, முறையான திட்டமிடல் மூலம் இந்த உலகளாவிய காலநிலைச் சவாலையும் முகாமைத்துவம் செய்ய முடியும் என ஜனாதிபதி இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes