General12 June 2026

சுற்றாடல் மாசுபாட்டின் செலவை நுகர்வோர் மீது சுமத்த அரசாங்கம் முயற்சி: நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாச அம்பலம்!

அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள உத்தேச தேசிய சுற்றாடல் (திருத்தம்) சட்டத்தின் மூலம், சுற்றாடல் மாசுபாட்டின் செலவீனங்களை உற்பத்தியாளர்கள் மட்டுமன்றி நுகர்வோரும் ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான கலந்தாலோசனைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்,

"சுற்றாடல் மாசுபாட்டின் செலவுகளை உற்பத்தியாளர்களே ஏற்க வேண்டும் என்ற நிலையே இதுவரை காணப்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கம் முன்மொழியவுள்ள புதிய திருத்தச் சட்டத்தின் மூலம் அந்தப் பொறுப்பு நுகர்வோர் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டத்தின்படி, நாம உரிமம், கழிவு முகாமைத்துவச் செயல்முறை மற்றும் உற்பத்தியாளரின் பொறுப்புக்கூறல் என்பனவற்றுக்கான செலவுகள் நுகர்வோர் மீதும் மாற்றப்பட்டுள்ளன. எனவே, இது குறித்து அரசாங்கம் மேலும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

தாமும், பேராசிரியர் அபேவிக்ரமவும் இலங்கை காலநிலை பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணை தலைவர்களாகப் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, தேசிய சுற்றாடல் (திருத்தம்) சட்டம் இந்த வாரமே சபைக்கு கொண்டுவரப்படவிருந்ததாகத் தெரிவித்தார்.

இருப்பினும், இது தொடர்பான தரப்பினருடன் முறையான கலந்தாலோசனைகளை நடத்துவதற்காகவே, நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் இச்சட்டமூலம் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அந்தக் கலந்தாலோசனைகளை விரைவாக முன்னெடுக்குமாறு அரசாங்கத்தைக் கோரினார்.

வடமேல் மாகாண சபை பிரத்தியேகமான சுற்றாடல் கட்டளைக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்தி வருவதை எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

"நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் போது சில நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

இருப்பினும், தற்போது மாகாண சபைச் சட்டத்திற்கும் மத்திய அரசின் சுற்றாடல் சட்டத்திற்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாக, மாகாண சட்ட நடைமுறையின் கீழ் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தால் ஏற்படும் சுற்றாடல் பாதிப்பைச் சரியாக மதிப்பிட முடியாமல் போயுள்ளது" என அவர் நாடாளுமன்றத்தில் கவலை வெளியிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes