General17 June 2026

அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு - மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் முன்னாள் அமைச்சர் ஜயகொடி

லங்காஉரம் நிறுவனத்தின் களஞ்சியசாலை வளாகத்தில் காபெட் (Carpet) இடும் ஒப்பந்தத்தை தனியார் நிறுவனமொன்றுக்கு சாதகமாக வழங்கியதன் மூலம், அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணை இன்று(17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு குற்றப்பத்திரிகைகளும் திறந்த நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டப்பட்டன.

குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தான் குற்றவாளி அல்ல என முன்னாள் அமைச்சர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வழக்கின் முறையான சாட்சி விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்தது.

கடந்த 2016ஆம் ஆண்டு லங்கா உரம் நிறுவனத்தின் (Lanka Fertilizer Company) கொள்முதல் முகாமையாளராகப் பணியாற்றிய காலத்தில், நிறுவனத்தின் களஞ்சியசாலை வளாகத்தில் காபெட் இடுவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதில் கொள்முதல் நடைமுறைகளை முறைகேடாகக் கையாண்டதாகக் கூறி கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனத்திற்கு தேவையற்ற சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம், அரசாங்கத்திற்கு 8,859,708 ரூபா நஷ்டம் விளைவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன், கையூட்டல் ஒழிப்புச் சட்டத்தின் 70ஆவது பிரிவின் கீழ் "ஊழல்" புரிந்த குற்றத்திற்காக சந்தேகநபருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes