General17 June 2026

கர்தினாலுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்ததாக பரவும் செய்திகளில் உண்மையில்லை - அருட்தந்தை சிறில் காமினி

கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து, கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை கொழும்பு பேராயர் இல்லம் முற்றாக நிராகரித்துள்ளது.

இதுதொடர்பில் கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என சுட்டிக்காட்டியுள்ள அருட்தந்தை சிறில் காமினி, இவ்வாறான போலியான குற்றச்சாட்டுகள் கடந்த 2020ஆம் ஆண்டிலும் சுமத்தப்பட்டு, அப்போதே பேராயர் இல்லத்தினால் அவை உத்தியோகபூர்வமாக மறுக்கப்பட்டிருந்தன என்றும் நினைவுபடுத்தியுள்ளார்.

தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு முன்னர், பாதுகாப்புப் பிரிவினரோ அல்லது உளவு அமைப்புகளோ அதுகுறித்த எந்தவொரு முன்கூட்டிய உளவுத்துறை தகவல்களையும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் பேராயர் இல்லம் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, சமூக ஊடகங்களில் உத்தியோகபூர்வ ஆதாரங்களின்றி பரப்பப்பட்டு வரும் இவ்வாறான உண்மைக்கு புறம்பான மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களை பொதுமக்கள் மேலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என கொழும்பு பேராயர் இல்லம் கேட்டுக்கொண்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes