General18 June 2026

எல் நினோ தாக்கத்தால் ஒக்டோபரில் இலங்கையில் அதிக மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு

வலுவடைந்து வரும் எல் நினோ காலநிலை நிகழ்வு மற்றும் இந்தியப் பெருங்கடல் இருமுனையகத்தின் மாற்றங்கள் காரணமாக, நடப்பு ஆண்டின் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் கடலோரப் பெருங்கடலியல் பேராசிரியர் சரித பத்தியராச்சி தெரிவித்துள்ளார்.

வலுவடைந்து வரும் எல் நினோ நிலைமைகளுடன், இந்தியப் பெருங்கடல் இருமுனையகத்தின் பலவீனமான நேர்மறை நிலையும் இணைந்து எதிர்வரும் மாதங்களில் இலங்கையின் வானிலை வடிவங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேராசிரியர் சரித பத்தியராச்சியின் கணிப்பின்படி,

செப்டம்பர் வரை (தென்மேற்கு பருவக்காற்று காலம்) இந்த காலப்பகுதியில் வழக்கமாகப் பதிவாகும் மழைவீழ்ச்சி இந்த முறை குறைய வாய்ப்புள்ளது.

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் வழக்கத்தை விட அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன், அது 100 மில்லிமீற்றரைக் கடக்கக்கூடும்.

அடுத்த வருட ஆரம்பம் (ஜனவரி முதல் ஏப்ரல் வரை) மீண்டும் சராசரியை விடக் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாக வாய்ப்புள்ளது.

அவுஸ்திரேலிய வானிலை ஆய்வுப் பணியகம் (Australian Bureau of Meteorology) ஜூன் 14ஆம் திகதி சேகரித்த தரவுகளின் அடிப்படையில் தனது காலநிலை முன்னறிவிப்பை மறுபரிசீலனை செய்துள்ளது.

அதன்படி , பசுபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியை விட 0.92°C ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாகக் கணிக்கப்பட்டதை விட எல் நினோ நிகழ்வு அதிக வலுவடையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதமளவில் மத்திய பசுபிக் பெருங்கடலின் வெப்பநிலை சராசரியை விட 3.3°C வரை உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் வெப்பநிலை தற்போதைக்கு நடுநிலையாக (neutral range) இருந்தாலும், கடந்த இரு வாரங்களாக உயர்வடைந்து வருகிறது.

ஜூன் 14 அன்றைய தரவுகளின்படி, இந்தியப் பெருங்கடல் இருமுனையகச் சுட்டெண் எதிர்மறை 0.13°C ஆகப் பதிவாகியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes