General18 June 2026

சவால்களுக்கு மத்தியிலும் 5% பொருளாதார வளர்ச்சியை எட்ட அரசாங்கம் எதிர்பார்ப்பு: பிரதி அமைச்சர் அனில் ஜயந்த

நாணயக் கொள்கை இறுக்கமாக்கப்பட்டுள்ளமை மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக நுகர்வு வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், நடப்பாண்டில் (2026) 5 வீத பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என எதிர்பார்ப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

109 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இலங்கைப் பொருளாதாரம், கடந்த மார்ச் மாதத்தில் 5.1 வீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது.

எனினும், தனியார் துறை கடன் வளர்ச்சி 27 வீதமாக உயர்ந்ததால், சந்தை தேவையைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி கடந்த மே மாதம் தனது முதன்மை வட்டி வீதத்தை 100 அடிப்படைப் புள்ளிகளால் (8.75% வரை) அதிகரித்தது.

அத்துடன், மத்திய கிழக்கு மோதல்களால் உள்நாட்டு எரிபொருள் விலைகளும் 48 வீதத்தால் அதிகரித்துள்ளன.

இது குறித்து, நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பிரதி அமைச்சர், வட்டி வீத அதிகரிப்பால் தற்காலிகமாக சந்தை தேவையில் வீழ்ச்சி ஏற்பட்டாலும், அது ஒட்டுமொத்த தேவையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாது என குறிப்பிட்டார்.

மேலும், நடுத்தர கால பொருளாதார வளர்ச்சி இலக்கான 7 வீதத்தை அடைவது குறித்து சர்வதேச பங்காளிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், முதலீடுகளை மேற்கொள்ள தனியார் துறை தைரியமாக முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் இந்த ஆண்டுக்கான வளர்ச்சி மதிப்பீட்டை 3 வீதமாகக் குறைத்துள்ளதுடன், மத்திய வங்கியும் தனது எதிர்பார்ப்பான 4 - 5 வீதத்தின் கீழ் மட்டத்திலேயே இந்த ஆண்டு வளர்ச்சி அமையும் எனக் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் எரிபொருள் மானியங்களை அரசாங்கம் முழுமையாக நீக்க வேண்டியுள்ளதால், ஏற்படும் பணவீக்கம் காரணமாக 2026 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி கணிசமாக மந்தமடையலாம் என சர்வதேச ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes