General19 June 2026

சவக்காரத்துக்கு வரி, சூதாட்ட நிறுவனங்களுக்கு சலுகையா? – ஹர்ஷ டி சில்வா கேள்வி!

சாதாரண பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சவக்காரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு 22 வீதம் வரை வரி விதிக்கப்படும் நிலையில், பாரிய இணையவழி சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து அரசாங்கம் உரிய முறையில் வரி வசூலிப்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சாட்டியுள்ளார்.

அரசாங்க நிதி பற்றிய குழு கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சாதாரண நுகர்வோர் பயன்படுத்தும் ஒரு சவக்காரத்துக்காக 21.5% முதல் 22% வரை VAT வரி அறவிடப்படுவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு ஏழை எளிய மக்களின் மீது கடுமையான வரிப்பளு சுமத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் காலங்களில் பந்துக்கு பந்து பந்தயம் கட்டும் ஒன்லைன் சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து ஒரு சதம் கூட வரியாக அறவிடப்படுவதில்லை. அரசாங்கத்தின் சின்னங்களைப் பயன்படுத்தி இவ்வாறான விளம்பரங்கள் தாராளமாக முன்னெடுக்கப்பட்ட போதிலும், அவற்றுக்கு வரி விதிக்கப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் குறிப்பிட்ட சில சூதாட்ட நிறுவன பணிப்பாளர்களிடமிருந்து வரிகளை அறவிடுவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாகக் கால அவகாசங்களை வழங்கி வருகின்றது.

இவ்வாறான நிறுவனங்களிடமிருந்து வரிகளை அறவிடுவதற்கான சட்டமூலத்தை ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிப்பதாகக் கூறப்பட்டது. தற்போது இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சாதாரண நடுத்தர வர்த்தகர்களையும், பொதுமக்களையும் வரியின் மூலம் ஒடுக்கும் அரசாங்கம், பெரும் சூதாட்ட நிறுவனங்களுக்குச் சலுகை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், குறிப்பிட்ட திகதிக்குள் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பதைத் தீர்மானிக்க நேரிடும் எனவும் ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes