General20 June 2026

நாட்டில் டெங்கு பரவல் தீவிரம்: ஜனாதிபதி செயலணியை உடனடியாக அமைக்குமாறு GMOA கோரிக்கை!

நாட்டில் தீவிரமடைந்து வரும் டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்றை உடனடியாக அமைக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்தச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் ஜமீல் விஜேசிங்க இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான டெங்கு தொற்று நிலைக்கு ஒப்பான அளவில் தற்போது நோயாளர்கள் பதிவாகி வருவதாக அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த மே மாதத்தில் நாடு முழுவதும் சுமார் 8,600 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், ஜூன் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களிலேயே 9 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், கொழும்பு மாவட்டத்தில் வாராந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 200 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிததுள்ளார்.

அத்துடன், பதிவாகும் மொத்த டெங்கு நோயாளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இதுவரை உச்ச நிலையை எட்டாத போதிலும், சுகாதார அமைப்பு ஏற்கனவே தனது அதிகபட்ச சேவைத் திறனை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், பணியாளர் மற்றும் மருந்து பற்றாக்குறை உள்ளிட்ட பல சவால்கள் நிலவுவதாகவும் மருத்துவர் ஜமீல் விஜேசிங்க தெரிவித்தார்.

எனவே, ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்து, இலக்கு அடிப்படையிலான தேசிய செயல் திட்டமொன்றை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes