General20 June 2026

கட்டார் வழங்கிய சொகுசு வானூர்தி: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிமுகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புதிய வானூர்தியாக பயன்படுத்தப்படவுள்ள போயிங் 747-8 (Boeing 747-8) ரக வானூர்தியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஜொயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் (Joint Base Andrews) இராணுவ தளத்தில் வைத்து இதனை அறிமுகப்படுத்தினார்.

சுமார் 400 மில்லியன் டொலர் மதிப்புள்ள இந்த அதிசொகுசு வானூர்தியை கடந்த ஆண்டு கட்டார் அரசாங்கத்திடமிருந்து அமெரிக்கா பரிசாகப் பெற்றது.

"இது உலகின் மிக ஆடம்பரமான மற்றும் தனித்துவமான வானூர்தி. முந்தைய வானூர்தியை விட இது மிகவும் பெரியது என்பதால், இதனை நிறுத்துவதற்காகவே பிரத்யேக ஹேங்கர் அமைக்கப்பட்டுள்ளது" என்று ட்ரம்ப் கூறினார்.

அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, எதிர்வரும் ஜூலை 4-ஆம் திகதி வொஷிங்டனில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட வானூர்தி அணிவகுப்பிற்கு இந்த புதிய வானூர்தி தலைமை தாங்கும் என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பயணங்களுக்குப் பயன்படுத்துவதற்கு முன்னதாக, இந்த வானூர்தி விரைவில் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளது.

இந்த வானூர்தி அதிநவீன பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளதாக அமெரிக்க வானூர்திப்படை தெரிவித்துள்ளது.

வானூர்திப்படையானது அழகை விட செயல்பாட்டுத் திறனுக்கே முக்கியத்துவம் அளித்துள்ளதால், விமானத்தின் உட்புற அமைப்பில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை.

இதன் காரணமாக, அதில் ஏற்கனவே இருந்த சொகுசு வசதிகள், தோல் இருக்கைகள் மற்றும் மரவேலைப்பாடுகள் அப்படியே தக்கவைக்கப்பட்டுள்ளன.

மேலும், வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக இந்த வானூர்தியின் உட்புறப் பகுதியின் முப்பரிமாண மாதிரி (3D mock-up) ஒன்றும் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes