General21 June 2026

சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம் - உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை

நாட்டின் சில பகுதிகளில் சிறுபோக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த பெரும்போக நெல் அறுவடைக்கு இதுவரை முறையான விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் நெல்லின் விலை 120 ரூபாவாகக் காணப்படுவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எப்பாவல பகுதியில் நேற்று(20) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர், எதிர்காலத்தில் வறட்சி நிலை ஏற்பட்டாலும் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு மத்தியில், இரத்தினபுரி - கொடகவெல, ரன்வல பகுதி விவசாயிகள், இந்த முறை சிறுபோக நெற் பயிர்ச்செய்கையை ஆரம்பித்து ஒன்றரை மாதங்களுக்கும் மேலாகியும், பயிர்களுக்குத் தேவையான உரங்களை இதுவரை முறையாகப் பெற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன், நெல் அறுவடைப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான முறையான விலை இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes