General21 June 2026

தரமற்ற நிலக்கரி கப்பலால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படுமா? : வலுசக்தி அமைச்சு வெளியிட்ட தகவல்!

நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட நிலக்கரி கப்பல் ஒன்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

அவசர கொள்முதல் அடிப்படையில், கொண்டுவரப்பட்ட ஐந்து கப்பல்களில் ஒரு கப்பலே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக, வலுசக்தி அமைச்சரின் செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அப்பொன்ஸு சூரியன் செய்திப் பிரிவிடம் தெரிவித்தார்.

குறித்த ஐந்து கப்பல் சரக்குகளும் இந்திய நிறுவனம் ஒன்றிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

எனினும், இந்த ஐந்து கப்பல்களில் ஒரு கப்பலில் கொண்டுவரப்பட்ட நிலக்கரிக்கான தரச்சான்றிதழ் தரமற்றவை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே, அது திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

திருப்பி அனுப்பப்பட்டுள்ள கப்பலுக்கான மாற்று நிலக்கரி கப்பலை, நாட்டுக்கு அனுப்பவுள்ளதாக குறித்த நிறுவனம் உறுதி வழங்கியுள்ளதாகவும், வலுசக்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடல் சீற்றம் காரணமாக, குறித்த மாற்றுக் கப்பல், எதிர்வரும் செப்டம்பர் மாதம், முதல் வாரத்தில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, 22 கப்பல்களிலிருந்து நிலக்கரிகள் , ஏற்கனவே வெற்றிகரமாக இறக்கப்பட்டுள்ளதாகவும் ஜி.எம்.ஆர்.டி. அப்பொன்ஸு கூறினார்.

23 ஆவது கப்பலில் உள்ள நிலக்கரி நாளை இறக்கப்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மின்சார உற்பத்தியைத் தடையின்றித் தொடரத் தேவையான குறைந்தபட்ச நிலக்கரி கையிருப்பை உறுதி செய்ய முடியும் என்றும், செப்டம்பர் மாதம் வரை அவசர மின் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes