General22 June 2026

அமோனியா வாயு கசிவு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவின் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேரில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா விசைவாயு கசிவு விபத்தில் சிக்கி, சென்னை ஸ்டான்லி அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி இன்று உயிரிழந்துள்ளார்.

இதன் மூலம் இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று தொழிற்சாலையில் உள்ள அமோனியா கொள்கலனில் ஏற்பட்ட திடீர் கசிவு காரணமாக, அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் நச்சு வாயுவை சுவாசித்து கடுமையான மூச்சுத் திணறலுக்கு உள்ளாகினர்.

இரண்டு பெண்கள் நேற்று சம்பவ இடத்திலும் மருத்துவமனையிலுமாக உயிரிழந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 4 பெண் தொழிலாளர்கள் இன்று அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த இளம் பெண் தொழிலாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரச மருத்துவமனை, ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை மற்றும் திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்ற தொழிலாளர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களில் சிலரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் 3 பேர் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes