International23 June 2026

நேபாளத்தின் முன்னாள் நிதி அமைச்சர் பணமோசடி குற்றச்சாட்டில் கைது

பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் நேபாளத்தின் முன்னாள் நிதி அமைச்சர் விஷ்ணு பிரசாத் பவுடல் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய அரசாங்கங்களின் ஊழல்களுக்கு எதிராக, தற்போதைய பிரதமர் பலேந்திர ஷா தலைமையிலான இளைய தலைமுறையினரின் ஆதரவுடனான அரசாங்கம் முன்னெடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக இக்கைது இடம்பெற்றுள்ளது.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் அரசாங்கத்தில் முக்கிய புள்ளியுமான 66 வயதுடைய பவுடல், மேற்கு நேபாளத்தில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தீவிர போராட்டங்களை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பே கே.பி. சர்மா ஒலியின் அரசாங்கம் கவிழ்ந்தது.
இதன்போது ஏற்பட்ட வன்முறைகளைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் ஒலியும் அவரது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரும் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் உள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் ஊழலை ஒழிப்பதாக உறுதியளித்து ஆட்சியைப் பொறுப்பேற்ற 36 வயதுடைய ராப் பாடகரான தற்போதைய பிரதமர் பலேந்திர ஷா, கடந்த கால ஊழல்களுக்கு எதிராக இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கைது குறித்து விஷ்ணு பிரசாத் பவுடலிடமிருந்து எவ்வித கருத்தும் வெளிவராத நிலையில், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து கலந்துரையாட, கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கூடவுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes