General23 June 2026

"வழக்குகள் எங்களுக்கு அல்ல, நீங்கள் ஆட்சிக்குக் கொண்டு வந்த உங்கள் நண்பர்களுக்கே உள்ளன!" - நாடாளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மான் அதிரடி

வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக நாங்கள் நடுநிலையாக இருந்து கூச்சலிடத் தேவையில்லை. இங்கு வழக்குகள் இருப்பது எங்களுக்கு அல்ல, உங்களால் கடந்த 2005 ஆம் ஆண்டு மேடைகளில் ஏறி போஸ்டர் ஒட்டி ஆட்சிக்குக் கொண்டு வரப்பட்ட உங்களின் சிறந்த நண்பர்களுக்கே வழக்குகள் உள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியின் கருத்தொன்றுக்குப் பதிலளித்த முஜிபுர் ரஹ்மான், நாட்டின் ஊழல்மிக்க ஆட்சி முறைக்கும் தற்போதைய அவலநிலைக்கும் அன்றைய ஆட்சியாளர்களைக் கொண்டு வந்தவர்களே பொறுப்புக்கூற வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் உள்ள எவரும் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்றும், அன்று அவர்களைத் தோளில் சுமந்து சென்றவர்களே இன்று இரு பிரிவாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவசர விவாதமொன்றை நடத்துமாறு நிலையியற் கட்டளைகளின் கீழ் எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் கோரியிருந்ததாக முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

"நிலையியற் கட்டளைகளின்படி சபாநாயகருக்கு அந்த விவாதத்தை வழங்க முழு அதிகாரம் உள்ளது. ஆனால், அவர் விவாதத்தை வழங்காமல் தன்னிச்சையாக வாக்கெடுப்புக்குச் செல்ல முயன்றார். நிலையியற் கட்டளைகளுக்கு முரணான சபாநாயகரின் இந்தச் செயற்பாட்டிற்கு எதிராகவே நாங்கள் நாடாளுமன்றத்தில் எமது கடுமையான எதிர்ப்பை வெளியிட வேண்டியதாயிற்று."

உயர் நீதிமன்றங்களில் நிலவும் நீதிபதிகளின் வெற்றிடங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

மேல் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களில் தற்போது 8 நீதிபதிகளுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன. வழக்கமாக ஜனாதிபதிகள் உடனடியாக இந்த நியமனங்களை வழங்குவர். ஆனால், தற்போதைய ஜனாதிபதி பல மாதங்களாக இந்த நியமனங்களை வழங்காமல் இழுத்தடித்து வருகிறார்.

மேல் நீதிமன்ற மற்றும் நீதவான் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இந்த வெற்றிடங்களைக் காட்டி, தனக்குத் தேவையான வழக்குகளில் சாதகமான தீர்ப்புகளைப் பெற்றுக்கொள்ள நீதிமன்றத்தை ஜனாதிபதி தன்பக்கம் திசைதிருப்ப முயல்கிறாரா என்ற நியாயமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கணக்காய்வாளர் நாயகம் நியமனத்தின் போதும் ஜனாதிபதி இதேபோன்று 9 மாதங்கள் இழுத்தடித்து, தனக்கு நெருக்கமான இராணுவ அதிகாரி அல்லது தனிப்பட்ட நண்பரை நியமிக்க முயன்று, அரசியலமைப்பு சபையால் அது நிராகரிக்கப்பட்டதை அவர் நினைவூட்டினார்.

அரசாங்கம் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாத்திரம் அதிகரிக்க முயல்வதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

"நாட்டில் மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்களுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவும் போது, அரச சேவையின் ஏனைய துறையினரின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்காமல், நீதிமன்ற நீதிபதிகளின் வயதை மட்டும் ஏன் அதிகரிக்க முயல்கிறார்கள்? இதன் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளைச் சந்தோஷப்படுத்தி, அரசாங்கத்திற்குத் தேவையான தீர்ப்புகளைப் பெற்றுக்கொள்ளவே இந்த முயற்சி எடுக்கப்படுகிறது."

இணக்கச் சபைகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டிய எளிய வழக்குகள் கூட மேல் நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டு, அரசியல் தேவைகளுக்காக மாதக்கணக்கில் தீர்ப்புகள் பிற்போடப்படுவதாக முஜிபுர் ரஹ்மான் சாடினார். நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையில் எவராவது தலையிட்டால், அது இந்த நாட்டின் ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக அமைந்துவிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes