International23 June 2026

ஈரானின் பெலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது: ஈரான் ஜனாதிபதி அதிரடி

அமெரிக்காவுடனான தற்போதைய பேச்சுவார்த்தைகளில் ஈரானின் பெலிஸ்டிக் (Ballistic) ஏவுகணைத் திட்டம் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும், இனிமேலும் நடத்தப்படாது என்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அவர், அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வொஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையிலான தற்போதைய பேச்சுவார்த்தைகள் குறித்து கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே அமெரிக்கா இருமுறை எம்மீது தாக்குதல் நடத்தியதால், நாம் அந்த நாட்டை நம்பவில்லை.

இருப்பினும், பேச்சுவார்த்தைக்கும் அமைதிக்கும் ஈரான் எப்போதும் தயாராகவே உள்ளது.

வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளின் போதும் எமது பலத்தை நாங்கள் தக்கவைத்துக் கொள்வோம். எமது பெலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை, இனிமேலும் அது குறித்து பேசப்படமாட்டாது.

இந்த அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளிலும்,புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுவதிலும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அந்த நாட்டு இராணுவத் தளபதி ஆகியோர் மேற்கொண்ட பெரும் முயற்சிகளைப் பாராட்டுகிறோம்.

மேற்கு ஆசிய பிராந்தியத்தின் முன்னேற்றமானது அமைதி, பாதுகாப்பு மற்றும் பிராந்திய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பிலேயே தங்கியுள்ளது என நாங்கள் நம்புகிறோம்.

ஈரானின் ஏவுகணைத் திட்டம் இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஏவுகணைத் திட்டங்களை வைத்திருப்பதற்கு ஏனைய நாடுகளைப் போன்றே ஈரானுக்கும் முழு உரிமை உண்டு என்றும், இதில் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes