General25 June 2026

மேல் மாகாணத்தில் 52% டெங்கு நோயாளர்கள்: 5,000 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு

டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய வகையில் சுற்றாடலைப் பேணி வந்த சுமார் 5,000 பேருக்கு எதிராக இதுவரையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான தரப்பினரைக் கண்டறிவதற்கான விசேட சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அச்சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், டெங்கு நோயைத் தடுப்பதற்கும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கும் புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, நேற்று முதல் நாளை வரை விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தரவுகளின்படி, டெங்கு நோய் காரணமாக இதுவரையில் 29 மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன், இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 49,000 ஐயும் கடந்துள்ளது.

இவ்வாறு பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 52 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும், டெங்கு நோய் பரவலில் புதிய வகை பிறழ்வுகள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என மருத்துவ நிபுணர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes