General25 June 2026

சர்வதேச ரீதியில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த 58 பிரதான குற்றவாளிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்

சர்வதேச ரீதியில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த 58 பிரதான குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள சில முக்கிய குற்றவழக்குகளின் சாட்சியாளர்கள் நாட்டில் சாட்சியமளிக்க அச்சப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்களது பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு தூதரகங்கள் மூலம் சாட்சியமளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். இதன்படி, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுக்கு அதிகாரிகள் நேரடியாகச் சென்று சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் உத்தியோகபூர்வ விபரங்களை ஜனாதிபதி நாடாளுமன்றில் சமர்ப்பித்தார்:

ஹெரோயின்: 3,390 கிலோ கிராம்

ஐஸ் : 5,543 கிலோ கிராம்

கொகெய்ன்: 304 கிலோ கிராம்

குஷ் : 1,521 கிலோ கிராம்

போதை மாத்திரைகள்: 51 இலட்சத்திற்கும் அதிகம்

ஆழ்கடலில் கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் மற்றும் வானூர்தி நிலையம், துறைமுக சோதனைகள் மூலம் இவை கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தலில் திட்டமிட்ட குற்றக்குழுக்கள் மட்டுமன்றி, வெளிநாட்டவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் சமூகத்தில் மிகக் கௌரவமான நிலையில் உள்ள முக்கிய புள்ளிகளும் எவ்வித தராதரமுமின்றி கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

சிறைச்சாலைகளுக்குள் இருந்துகொண்டு திட்டமிட்ட குற்றக்குழுக்கள் போதைப்பொருள் நெட்வொர்க்கை இயக்குவதை முழுமையாகத் தடுப்பதற்காக, வெலிசறையில் அதிநவீன விசேட சிறைச்சாலை வளாகம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

"பிரதான குற்றவாளிகள் அனைவரும் வெலிசறை விசேட சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள். அங்கு அனைத்துத் தகவல் தொடர்பு வலைப்பின்னல்களும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சிறைக்குள் இருந்துகொண்டு குற்றங்களை இயக்கும் கலாசாரம் கணிசமான அளவு முடக்கப்பட்டுள்ளது" என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அதேவேளை , அரசாங்கத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பு எழுதினால் பதவி உயர்வு தருவோம் என நீதியரசர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி, நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய எந்தவொரு தேவையும் எமது அரசாங்கத்திற்கு இல்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றங்களில் நிலவும் நீதியரசர் பற்றாக்குறை மற்றும் புதிய நியமனங்கள் குறித்து தலைமை நீதியரசருடன் விரிவாகக் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அது குறித்து தலைமை நீதியரசர் தமக்கு நீண்ட விளக்கமளித்துள்ளதாகவும் கூறினார்.

"நாம் ஏதோ ஒரு நீதிமன்றத்தில் நிலவும் வெற்றிடத்தைப் பற்றி மாத்திரம் சிந்திக்கவில்லை. ஒட்டுமொத்த நீதிமன்றக் கட்டமைப்பின் இருப்பு குறித்தே சிந்திக்கிறோம். கீழ் நீதிமன்றங்களில் பெரும் பற்றாக்குறை நிலவுவதால், சில நீதவான் நீதிமன்றங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்ய முதற்கட்டமாக 50 புதிய நீதவான்களை இணைத்துக் கொள்ள நீதிச் சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதுடன், தற்போது 33 பேர் நேர்முகத் தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்."

நீதிமன்றங்களை எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி சுதந்திரமாக இயங்க அனுமதித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், "நீதியரசர்கள் கடுமையான அர்ப்பணிப்புடன், நீண்ட நேரம் உழைத்து மக்களுக்கு நீதியை வழங்கி வருகிறார்கள். அவர்களின் கௌரவத்தைக் குறைக்கும் வகையில் யாரும் கருத்துக்களை வெளியிட வேண்டாம்" எனவும் கேட்டுக்கொண்டார்.

எமது அரசாங்கத்திற்கு நீதிமன்றங்களையோ, ஊடகங்களையோ அல்லது மக்கள் போராட்டங்களையோ எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

"அரசாங்கத்தை விமர்சிப்பதற்கும், எம்மைக் கேள்வி கேட்பதற்கும், எமது தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் முழுமையான உரிமை உண்டு. கடந்த காலங்களைப் போல ஊடகங்களை நாம் கட்டுப்படுத்தப் போவதில்லை."

ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, ஊடக நிறுவனங்களும் தங்களுக்கான நெறிமுறைகளைப் பேணக் கற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சமூகம் புதிய சிந்தனைகளுடன் முன்னோக்கி நகரும் போது, ஊடகங்கள் மாத்திரம் தங்களின் பழைய குப்பை மேட்டிலேயே இருக்க நினைத்தால், சமூகத்தில் ஊடகங்களுக்கு இருக்கும் இருப்பு மற்றும் மதிப்பு இல்லாமல் போய்விடும் எனவும் அவர் எச்சரித்தார்.

இலங்கையை ஒரு நாகரிகமான நாடாகவும், சட்டம் ஒழுங்கு மதிக்கப்படும் சமூகமாகவும் மாற்றுவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் தூய்மையான பயணத்திற்குப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒட்டுமொத்தப் பொதுமக்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes