General26 June 2026

பேருந்து சேவையை நவீனமயப்படுத்த திட்டம் - 600 புதிய பேருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவையை வலுப்படுத்துவதற்கும், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகளை பயணிகளுக்கு வழங்குவதற்கும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு புதிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அதன்படி, இந்த வருட இறுதிக்குள் 600 புதிய பேருந்துகளை இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் அதிவேக நெடுஞ்சாலை சேவைகளுக்காக 200 சொகுசுப் பேருந்துகளும், சாதாரண வழித்தடங்களுக்காக 400 சாதாரண பேருந்துகளும் உள்ளடங்கும்.

இந்த பேருந்து தொகுதிகள் டிசம்பர் மாதமளவில் நாட்டை  வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட 104 புதிய மெட்ரோ பேருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவை ஆகஸ்ட் 15-ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மெட்ரோ பேருந்துகளில் அட்டை (Card) அடிப்படையிலான கட்டண அறவீட்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதற்கான நிறுவல் மற்றும் பரிசோதனைப் பணிகளைத் தொடர்ந்து, செப்டம்பர் 20-ஆம் திகதி முதல் இந்த பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகள் மற்றும் சாதாரண வீதிகளில் நிலவும் பயணிகளின் தேவையை எளிதாக்குவதையும், இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து தொகுதியை மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் நவீனமயப்படுத்துவதையுமே இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes