General26 June 2026

சபரகமுவ மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்: இதுவரை 4,660 பேர் பாதிப்பு, 5 உயிரிழப்பு!

இரத்தினபுரி: சபரகமுவ மாகாணத்தில் இந்த ஆண்டில் இதுவரை 4,660 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளதாக சபரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஜே. எம். யூ. கே. ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சபரகமுவ மாகாண டெங்கு ஒழிப்புக்குழுக் கூட்டம் இன்று (26) இரத்தினபுரியில் உள்ள மாகாண சபை கேட்போர் கூடத்தில், மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலேயே இந்தத் தரவுகள் வெளியிடப்பட்டன.

மாகாணத்தில் டெங்கு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை 'டெங்கு ஒழிப்பு வாரமாக' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் அரச மற்றும் தனியார் துறையினர் அனைவரும் ஒன்றிணைந்து முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டுமென மாகாண பிரதம செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நிகழ்வில் கருத்துத் தெரிவித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, "டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் வெறும் ஒரு வாரத்துடன் நின்றுவிடக் கூடாது. வருடம் முழுவதும் இந்தச் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கு உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்கள், சுகாதாரப் பிரிவினர் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அனைத்து அரச மற்றும் தனியார் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியமாகும்" என்று வலியுறுத்தினார்.

மேலும், இந்த டெங்கு ஒழிப்புத் திட்டங்களை வினைத்திறனாக முன்னெடுப்பதற்கு 'பிரஜா சக்தி' குழுக்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளுமாறு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் திட்டமிடல் வைத்திய அதிகாரி காமினி இதன்போது பரிந்துரைத்தார்.

இந்தநிகழ்வில் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related recommendation
Hiru TV News | Programmes