General26 June 2026

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிக்காகப் புறப்படும் இலங்கை படைப்பிரிவு: ஜனாதிபதி நேரில் சென்று வாழ்த்து!

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக இலங்கையிலிருந்து புறப்படவிருக்கும் 1,132 பேரைக் கொண்ட இராணுவம் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை உறுப்பினர்களை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு பனாகொடையிலுள்ள இலங்கை காலாட்படைப் பிரிவு தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள், காவல்துறை மா அதிபர், அமெரிக்க தூதரகத்தின் பதில் தூதுவர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் படையினரின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.​

இலங்கையிலிருந்து ஒரே தடவையில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிக்கு புறப்படும் மிகப்பெரிய குழு இதுவாகும். அத்துடன், ஜனாதிபதி ஒருவர் நேரில் வந்து வாழ்த்துத் தெரிவித்த முதலாவது சந்தர்ப்பமும் இதுவேயாகும்.

இந்த நிலையில், தற்போதைய நெருக்கடி நிலையைக் கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்டுவதற்காக, இந்த வன்முறை ஒழிப்புப் படைப்பிரிவு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஹைட்டி (Haiti) நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

900 இராணுவப் படையினர், 189 காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் நாட்டின் இராணுவ வரலாற்றில் முதல் முறையாக நிலக்கண்ணிவெடிகளை செயலிழக்கச் செய்வதில் சிறப்புப் பயிற்சி பெற்ற 43 பெண் இராணுவ உறுப்பினர்கள் இதில் அடங்குகின்றனர்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘யுனி பபல்’ ரக வாகனங்கள் மற்றும் 02 சிறப்பு குண்டுதுளைக்காத வாகனங்கள் உள்ளிட்ட கவச வாகனங்கள் இந்த குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளன.

நாம் உலகின் செல்வந்த நாடாக மாறுவது கடினமாக இருந்தாலும், உலகின் பெருமைமிக்க நாடாக மாற முடியும். உலகில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் மக்களின் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க இலங்கை இராணுவம் தயாராக உள்ளது என்பதை இக்குழு உலகிற்கு உணர்த்துகிறது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இந்த நிகழ்வின் போது தெரிவித்தார்.

​கடந்த நவம்பர்-டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளி போன்ற உள்நாட்டு அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் அளவுக்கு நாட்டின் பொருளாதாரம் தற்போது வலுவடைந்துள்ளது.

புதிய பண அச்சிடல் அல்லது கடன்கள் இன்றி 50,000 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்ட போதிலும், முதல் காலாண்டில் 5.1% பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டது.

மத்திய கிழக்கு யுத்த சூழலிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்க 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes