General28 June 2026

நாட்டில் 51,049 டெங்கு நோயாளர்கள் பதிவு - கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த புதிய சுற்றறிக்கை தயார்

நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சூழலைச் சுத்தப்படுத்துவதற்கும் நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுவதற்கும் புதிய சுற்றறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

கிராம மட்டத்திலான சமூக வலுவூட்டல் குழுக்களின் ஊடாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதில் கிராம உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்பார்கள்.

ஜனாதிபதி செயலாளர் அல்லது சுகாதார அமைச்சின் செயலாளரினால் இன்னும் சில தினங்களில் இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.

தற்போதைய உயர் டெங்கு அபாய காலத்தைக் கருத்திற்கொண்டு, தினசரி டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு இந்தச் சுற்றறிக்கை வழிநடத்தும்.
அபாய நிலை குறையும் போது, இவை வாராந்த நடவடிக்கைகளாகக் குறைக்கப்படும்.

இந்த வருடத்தில் இதுவரை 51,049 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 31 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை மேல், தென், சபரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 124 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு பரவலுக்கு உயர் அபாயமுள்ள பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தமது சூழலைத் தொடர்ச்சியாகச் சுத்தமாக வைத்திருக்குமாறும், நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுமாறும் சுகாதாரத் துறையினர் தொடர்ந்தும் அறிவுறுத்தி வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes