General29 June 2026

யாழ்ப்பாண மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமனம்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

புனித பாப்பரசர் 14ஆம் லியோவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த திருத்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம், 2000ஆம் ஆண்டு கொழும்பு மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

அதன்பின்னர் சமய, கல்வி மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் பல்வேறு பணிகளை வகித்துள்ளார்.

அவர் ரோமில் இறையியலில் பட்டம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம், கல்வியியல் தொடர்பான டிப்ளோமா மற்றும் முதுகலைப் பட்டங்கள் உள்ளிட்ட பல உயர்கல்வித் தகைமைகளையும் பெற்றுள்ளார்.

2020ஆம் ஆண்டு அப்போதைய புனித பாப்பரசர் பிரான்சிஸால், கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்ட அவர், அதே ஆண்டு ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

பின்னர் 2024ஆம் ஆண்டு மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில்,தற்போதைய யாழ்ப்பாண ஆயர் திருத்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசத்தின் ஓய்வைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes